சென்னை: தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும், கடந்த 2018 டிசம்பர் 4ம் தேதி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து பெற்ற அசல் சான்றிதழ்களை சரிபார்ப்புக்கு பின் உடனடியாக திருப்பி ஒப்படைத்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதில்அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்கப்பட்டது. எதற்கு எதிர் தரப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு வருமாறு: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தனது உத்தரவில் தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ராஜினாமா செய்யும் போது அவர்களது அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் எனவும், ஒருவேளை அசல் சான்றிதழ்களை திருப்பி வழங்க மறுத்தால் அக்கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை எக்காரணம் கொண்டும் கல்லூரி நிர்வாகங்கள் தங்களிடம் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், சரிபார்ப்பிற்குப்பிறகு அவற்றை சம்பந்தப்பட்டவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. எனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் என்ன அறிவுறுத்தியுள்ளதோ அதை மீண்டும் சுற்றறிக்கையாக பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.