புதுடெல்லி: தனியார் ரயில்களை இயக்க முதல்கட்டமாக 50 முக்கிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுக்குள் 150 ரயில்களை தனியார் மயமாக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னையிலிருந்து மதுரை, கோவை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்ட 150 வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ள ரயில்வே வாரியம், அவற்றில் எந்தெந்த வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்கலாம் என்பது குறித்த கருத்துகளைத் தெரிவிக்கும்படி மண்டல ரயில்வே நிர்வாகங்களைக் கேட்டிருக்கிறது.
இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் தெற்கு ரயில்வே உள்ளிட்ட 6 மண்டல தலைமை இயக்க மேலாளர்களும் பங்கேற்றனர். இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘முதல்கட்டமாக 50 முக்கிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக கூடுதல் மற்றும் புதிய ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள், விரிவாக்கப் பணிகளின் நிலை குறித்து அந்தந்த மண்டல ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார். அடுத்த மாதம் 4ம் தேதி முதல் முறையாக டெல்லி-லக்னோ இடையே ஐஆர்சிடிசியின் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது.