சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அரசியல் வேண்டாம் என நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். சில வருடங்களுக்கு முன் பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால் அரசியல் சரிப்படவில்லை எனக் கூறி ஒதுங்கினார். இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.இது குறித்து சிரஞ்சீவி கூறியது: சினிமாவில் நம்பர் ஒன் இடத்திலிருந்தேன். அதைவிட்டு ஆர்வத்தோடு அரசியலுக்கு வந்தேன். என் சொந்த தொகுதியில் என்னை தோற்கடிக்க கோடிக்கணக்கில் செலவு செய்து தோற்கடித்தார்கள். என் தம்பி பவன் கல்யாணுக்கும் அதேதான் நடந்தது.
கமல்ஹாசன் தேர்தலில் ஜெயிப்பார் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களையும் பொறுத்துக்கொண்டால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்னைப்போல் சென்சிட்டிவாக இருப்பவர்களுக்கு அரசியல் சரிப்படாது. கமல், ரஜினி என்னைப்போல் இருக்கமாட்டர்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் என் நண்பர்களான ரஜினி, கமல் இருவருக்கும் என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான். அரசியல் வேண்டாம். தோல்விகள். ஏமாற்றங்கள், கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை மக்களுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று நினைத்தால் மட்டும் அரசியலுக்கு வாருங்கள். இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.