×

சவுதி விமான நிலையத்திலேயே உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சி: இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் தகவல்

சென்னை: சவுதியில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே உடனடியாக உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். இந்திய ஹஜ் சார்பில் அகில இந்திய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. இதில் சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் அசூப், இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் அபுபக்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் ஹஜ் அமைப்பின் தலைவர்கள், செயல் அதிகாரிகள், வெளியுறவு துறை, சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அபுபக்கர் பேசியதாவது: இஸ்லாமியர்கள் மீது கொண்டுள்ள பற்று, பாசம் காரணமாக தமிழக அரசு ஹஜ் பயணத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மானியம் அளித்து வருகிறது. இந்தியாவிலேயே இத்தகைய மானியம் தரும் ஒரே அரசு தமிழகம் மட்டும்தான்.

சவுதியில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே உடனடியாக உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 2020ம் ஆண்டு ஹஜ் செல்லும் ஹாஜிமார்களுக்கு நிறைந்த வசதிகள் செய்து தரும் வகையில் ஏர் இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் போடப்படும்.  அதிக அளவு இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் செல்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. 2019 ஹஜ்க்கு அயராது உழைத்த பிரதமர் அலுவலகம் மற்றும் சிறுபான்மை அமைச்சகத்துக்கும், இந்தியாவில் வாழும் 30 கோடி இஸ்லாமியர்களின் சார்பாகவும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : India ,Indian Hajj Association ,Saudi Arabia ,President , President of Saudi Hajj Association, Umrah Visa, India, Indian Hajj Association
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்