எல் பசோ: அடைக்கலம் வழங்கும்படி வலியுறுத்தி அமெரிக்க தடுப்பு முகாமில் 70 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பாதியாக உடல் இளைத்த இந்தியரை அமெரிக்கா தற்காலிகமாக விடுவித்தது. மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற முயன்ற இந்தியர் அஜய் குமார்(33) என்பவர் கைது செய்யப்பட்டு மெக்சிகோவில் உள்ள அமெரிக்க தடுப்பு முகாமில் ஓராண்டுக்கு மேலாக அடைக்கப்பட்டார். அங்கு அவர் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு மனு செய்தார். அதில், ‘இந்தியாவில் எதிர்கட்சியான இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் முன்னேற்றத்துக்காக பணியாற்றியதால், என்னை பாஜ கட்சியைச் சேர்ந்தவர்கள் அடித்து துன்புறுத்தினர். இரண்டு முறை தாக்கப்பட்டதால், ஒரு மாத காலம் படுக்கை நிலையில் சிகிச்சை பெற்றேன்.
உயிர் பிழைக்க இந்தியாவை விட்டு இங்கே தப்பி வந்தேன். எனவே, அமெரிக்காவில் எனக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்’ என கூறி, மருத்துவ சான்றிதழையும் இணைத்திருந்தார். இதை நிராகரித்த அமெரிக்க குடியுரிமைத் துறை நீதிபதி, ‘அடைக்கலம் கேட்பதாக கூறப்பட்டுள்ள காரணங்கள் நம்பும்படியாக இல்லை,’ என கூறினார். இதனால், விரக்தி அடைந்த அஜய் குமார், ‘அடைக்கலம் தரும்வரை சாப்பிட மாட்டேன்,’ என கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். கடந்த 70 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் அவருடைய உடல் எடை பாதியாக குறைந்தது.
அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அதிகாரிகள், அஜய் குமாரை தற்காலிகமாக விடுவித்துள்ளனர். அவருக்கு மூக்கு வழியாக திரவ உணவு கொடுக்கப்பட்டு கட்டாய சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட அவருடைய நடமாட்டத்தை கண்காணிக்க, அவரது கையில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.