×

110 கி.மீ வேகத்தில் ஓடும் மின்சார ரயில்: தஞ்சை- திருச்சிக்கு 27 நிமிடத்தில் செல்லலாம்

தஞ்சை: தஞ்சை- திருச்சி இடையே இரட்டை வழி அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு, அதில் தற்போது மின்மயமாக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. திருச்சி - தஞ்சாவூர் - காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டது. இதில் தஞ்சாவூர் - திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதன்பிறகு இதுவரை மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முதன்முறையாக திருச்சி- தஞ்சாவூர் வழியாக மின்சாரத்தில் இயங்க கூடிய சரக்கு ரயில் தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தது. பின்னர், தஞ்சாவூரிலிருந்து டீசலில் இயங்க கூடிய ரயில் இன்ஜின் மாற்றி பொருத்தப்பட்டு காரைக்காலுக்கு சென்றது. இந்த வழித்தடத்தில் ஜனசதாப்தி, செந்தூர் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில்கள், சோழன், ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதற்காக தஞ்சாவூரிலிருந்து திருச்சி வரை இரண்டு பெட்டிகளுடன் கூடிய சிறப்பு சோதனை மின்சார ரயில் இயக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் பொறியாளர்கள், ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். பகல் 12.20 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் மதியம் 1 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்துக்கு சென்றது. இதுகுறித்து ரவிக்குமார் கூறுகையில், தஞ்சாவூர் -திருச்சி இடையே செல்லும் ரயில்கள் தற்போது மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இதனை 110 கிலோ மீட்டராக்க முடிவு செய்து அதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு எங்கும் இடையில் நிற்காமல் சென்றால் அரைமணி நேரத்தில் செல்லலாம், வேகம் அதிகரிக்கப்பட்டவுடன் 27 நிமிடங்களில் சென்றுவிடலாம், இந்த சோதனை முடிந்தவுடன் அதன்பிறகு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்றார்.

Tags : Tanjore-Trichy ,Tanjore ,Railway , Tanjore, Trichy, Railway
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...