×

தஞ்சை- திருச்சி இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்

தஞ்சை : தஞ்சை- திருச்சி இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. தஞ்சை- திருச்சி இடையே இரட்டைவழி அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு அதில் தற்போது மின்மயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. திருச்சி- தஞ்சை- காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டது. இதில் தஞ்சை- திருச்சி இடையே மின்சார சோதனை ரயில் ஓட்டம் கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதன்பிறகு இதுவரை மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முதன்முறையாக திருச்சி, தஞ்சாவூர் வழியாக மின்சாரத்தில் இயங்கக்கூடிய சரக்கு ரயில் தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தது. பின்னர் தஞ்சாவூரில் இருந்து டீசலில் இயங்கக்கூடிய ரயில் இன்ஜின் மாற்றி பொருத்தப்பட்டு காரைக்காலுக்கு சென்றது. இந்த வழித்தடத்தில் ஜனசதாப்தி, செந்தூர் சூப்பர் பாஸ்ட், சோழன், ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நேற்று சோதனை ஓட்டம் நடந்தது.

இதற்காக தஞ்சையில் இருந்து திருச்சி வரை 2 பெட்டிகளுடன் கூடிய சிறப்பு சோதனை மின்சார ரயில் இயக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் பொறியாளர்கள், ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். பகல் 12.20 மணிக்கு தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் மதியம் 1 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்துக்கு சென்றது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் ரவிக்குமார் கூறியதாவது: தஞ்சை- திருச்சி இடையே செல்லும் ரயில்கள் தற்போது மணிக்கு 95 கிலோ மீட்டரில் செல்கிறது. இதை 110 கிலோ மீட்டராக்க முடிவு செய்து அதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு எங்கும் இடையில் நிற்காமல் சென்றால் அரை மணி நேரத்தில் செல்லலாம். வேகம் அதிகரிக்கப்பட்டவுடன் 27 நிமிடங்களில் சென்று விடலாம். இந்த சோதனை முடிந்தவுடன் அதன்பிறகு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்றார்.

Tags : Tanjore ,Trichy- Tanjore Railway Track Electric Train Range , Trichy,Tanjore , Electric Railway Track,
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...