சென்னை: தமிழக சாரண சாரணியர் இயக்கம் பயன்படுத்தும் வகையில் பள்ளியில் காலியாக உள்ள வகுப்பறைகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை ஆளுநர் மாளிகையில் மாநில சாரணர் ஆளுநர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் 1000 பேருக்கு விருதுகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், மாநில சாரண சாரணிய இயக்க தலைவர் மணி, முதன்மை ஆணையர் இளங்கோ, ஆணையர் மேத்தா, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். விருதுகளை வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
விழாவில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் 4 லட்சம் மாணவ-மாணவியர், சாரண- சாரணிய இயக்கத்தில் உள்ளனர். இதற்காக தமிழகத்தில் 131 மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் காலியாக வகுப்பறைகள் உள்ளதோ அங்கெல்லாம் சாரண- சாரணியர் பயன்படுத்துவதற்கு உத்தரவிட முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். சாரண- சாரணியர் மாணவர்களுக்கு தொடர்ந்து சீருடை வழங்கப்படும். நிதி பிரச்னை இருந்த போதும் இந்த அமைப்புக்கு ஏற்கெனவே ரூ.2 கோடி முன்வைப்பு தொகை உள்ளது. அதிலிருந்து தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும்.