×

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையால் மாமல்லபுரத்தில் கடை வைத்துள்ள காஷ்மீரிகளிடம் விசாரணை

சென்னை: மாமல்லபுரத்துக்கு பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையால், மாமல்லபுரத்தில் கடை வைத்துள்ள மற்றும் தங்கி உள்ள காஷ்மீரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உலக அளவிலான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்ற மாமல்லபுரத்துக்கு அக்டோபர் 11ம் தேதி பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். அவர்கள், மாமல்லபுரத்திலுள்ள அழகிய சிறப்பு வாய்ந்த புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் ஆகியவைகளை பார்வையிட உள்ளனர். மேலும், இந்தியா-சீனா இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் வருகையையொட்டி  மாமல்லபுரத்தில் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் சுமார் 45க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் சங்குமணி கடைகள், துணி உள்ளிட்ட கடைகள் நடத்தி வருகின்றனர். அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இங்கு கடை வைத்துள்ளார்கள். அவர்களின்  பெயர் மற்றும் முகவரி சரியாக உள்ளதா. குடும்பத்துடன் வசிக்கிறார்களா அல்லது தனியாக வசிக்கிறார்களா. எத்தனை பேர் வசிக்கிறார்கள் உள்ளிட்டவை குறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை          
சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இருவரும் கடற்கரை கோயிலை பார்ப்பதற்காக நடந்து செல்ல ஏதுவாக நவீன முறையில் புதிதாக கிரானைட் கற்கள் பதித்து நடைபாதைகள் அமைக்கப்பட்டு, அந்த நடைபாதை பகுதிக்கு அருகில் அழகிய பசுமையான புல்வெளி அமைக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரத்திற்கு வரும் சீன அதிபர் ஜின்பிங் கண்டு மகிழும் வகையில் கடற்கரை கோயிலின் நுழைவு வாயில் பகுதியில் இருபுறமும் யானைகளுக்கு நடுவில் புத்தர் அமர்ந்து இருப்பது போன்று புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Modi ,Kashmiris ,Mamallapuram ,Chancellor ,Chinese ,Chancellors , Prime Minister Modi, Chinese President, Mamallapuram, Kashmiris
× RELATED மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு