சென்னை: முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸ் தனது மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராபர்ட் பயாஸ், முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசும் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக இன்னும் அவர் முடிவு எடுக்காததால் பரிந்துரை, ஆளுநர் அலுவலகத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நெதர்லாந்தில் வசிக்கும் 29 வயதான தன் மகன் தமிழ்கோ, திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். ராபர் பயஸ் பரோல் மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.