×

மழை பெய்யவேண்டி, மானாமதுரையில் காவல்தெய்வத்திற்கு ‘கமகம’ கறி விருந்து

மானாமதுரை: மழை பெய்ய வேண்டி மானாமதுரையில் காவல்தெய்வத்திற்கு மண்சட்டியில் கறி விருந்து படையல் படைத்து ஏராளமான பெண்கள் வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் கோயில். மானாமதுரை நகர் காவல்தெய்வமாக இந்த அம்மனுக்கு காப்பு கட்டி சித்திரை திருவிழா நடத்திவிட்டுத்தான் ஆனந்தவல்லி சோமநாதருக்கு சித்திரை திருவிழா துவங்கும். பெண் தெய்வம் என்பதால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் சித்திரை திருவிழாவும், புரட்டாசி மாதத்தில் செவ்வாய்சாட்டுதல் விழாவும் நடப்பது வழக்கம். இந்தாண்டு செவ்வாய் சாட்டுதல் விழா கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 17ல்) துவங்கியது. ஏழாம் நாளான நேற்று முன்தினம் பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய் வழிபாடு துவங்கியது.

இதையொட்டி அம்மனுக்கு படையலாக பணியாரம், கொழுக்கட்டையுடன் நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை கிராம மக்கள் வீட்டில் தயார் செய்தனர். பின்னர் ஏராளமான பெண்கள் பாரம்பரிய முறைப்படி மண்ணாலான சட்டி பானையில் மூன்று, நான்கு அடுக்குகளாக வைத்து அதன் மேல் தீப்பந்தம் ஏற்றி பழைய பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள குறத்தியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்து எல்லைப்பிடாரி அம்மனுக்கு படையிலிட்டு வழிப்பட்டனர். அம்மனுக்கு படையலிடும் பொருட்களுடன் ஏற்றப்படும் தீபம் கோயில் வரை எரிந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. விழா ஏற்பாடுகளை மானாமதுரை கஸ்பாகிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags : Rain, curry feast
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...