திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், கிறிஸ்தவ பெண்களை காதலித்து, லவ் ஜிகாத் என்ற பெயரில் அவர்களை மதம் மாற்றி பயங்கரவாத அமைப்புகளில் இணைப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேசிய சிறுபான்மையினர் கமிஷன் புகார் அளித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவரின் 18 வயது மகள் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். அங்குள்ள கோச்சிங் சென்டரில் டியூசனுக்கு சென்றபோது கோழிக்கோடு நடுவண்ணூர் பகுதியைச் சேர்ந்த முகமது ஜாசிம் பாலிடெக்னிக் கல்லுாரியில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்துள்ளனர்.
இந்நிலையில், முகமது ஜாசிம் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவியை ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து காரில் லாட்ஜுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அறையில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை நிர்வாண படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த படத்தை காண்பித்து மாணவியை மதம் மாறுமாறு கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை ஷாஜி கோழிக்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு ஷாஜி புகார் மனு அனுப்பினார்.
இதன்படி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய உளவு அமைப்பு (ஐபி) விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த 22-ம் தேதி மாணவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவியை பலாத்காரம் செய்த முகமது ஜாசிம் இதுபோல் மேலும் பலரை பலாத்காரம் செய்து கட்டாய மதமாற்றம் செய்திருக்கலாம் என உளவுத்துறை கருதுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேசிய சிறுபான்மையினர் கமிஷனின் துணை தலைவர் ஜார்ஜ் குரியன், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கேரளாவில் உள்ள பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள், லவ் ஜிகாத் என்ற பெயரில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்களை குறிவைத்து காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். பின், திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி மிரட்டல் விடுக்கின்றனர்.
டெல்லியில் படிக்கும் கேரள மாணவி ஒருவரும், லவ் ஜிகாத்ல் சிக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றி, அவரது பெற்றோர், புகார் அளித்துள்ளனர். இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரை, கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு மறுத்துள்ளது. தேசிய சிறுபான்மையினர் கமிஷனின் புகாரில், அரசியல் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.