மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதையடுத்து 16 கண் மதகு வழியாக நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 37,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்தது. இந்த தண்ணீர் முழுவதும் டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.22 அடியாகவும், நீர் இருப்பு 93.82 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு 2வது நாளாக நேற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் சவாரி செய்யவும் தடை தொடர்ந்து நீடித்துள்ளது.