கும்பகோணம்: போன் செய்தால் போதும் வீடு தேடி டோர் டெலிவரியாக புதுச்சேரி மதுபாட்டில்கள் கொண்டு வந்து கொடுக்கும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு சவால்விடும் வகையில் கள்ளச்சாராய வியாபாரிகள், வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் விதவிதமான வகையில் விற்பனையை கையாண்டு வருகிறார்கள். இதில் ஒன்றுதான், ‘போன் செய்தால் போதும், மது பாட்டில்களை வீடு தேடி வரும்’ என்ற நூதன விற்பனையாகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருப்பனந்தாள் பகுதிகளில் வெளிமாநில மதுவகைகள் விற்பனை நடப்பதாக திருப்பனந்தாள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை திருப்பனந்தாள் போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். திருலோகி ஊராட்சி அலுவலகம் முன் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை (ஸ்கூட்டி) நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டி மற்றும் சீட்டுக்கு அடியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 50 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கபில்ராஜ் (25), சத்யசீலன் (24) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மதுபாட்டிலை டூவீலரில் வீதிவீதியாக எடுத்து சென்று வீடு, கடைகளில் சப்ளை செய்து வந்ததும், வழக்கமான வாடிக்கையாளர்கள் போனில் ஆர்டர் கொடுத்து விட்டால், வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்து வந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கபில்ராஜ், சத்யசீலன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள், மற்றும் டூவீரை பறிமுதல் செய்தனர்.