தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுக்கோட்டை ஊராட்சி ஆலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லகுமப்பா. விவசாயி. இவரது 2வது மகன் தினேஷ் (16), தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். இந்நிலையில், தினேசுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சைக்குப்பின் கடந்த 23ம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மயங்கி விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தின் தகவலின்படி உடனடியாக பெற்றோர் தினேசை அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் தினேசுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மதியம் தினேஷ் உயிரிழந்தார்.