×

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இன்ஜி. கல்லூரிகளில் பகவத் கீதை பாடம்: தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் கண்டனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் பகவத்கீதையை பாடமாக திடீரென்று சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாணவர் அமைப்புகள், எழுத்தாளர்கள்,  கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இன்ஜினியரிங் கல்விக்கான பாடத்திட்டத்தை தொழில்நுட்ப கல்விக்கான உயர் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்தல், மேம்படுத்துதல் பணிகளை மேற்கொண்டு  வருகிறது. ஏஐசிடிஇ வடிவமைக்கும் பாடத்திட்டத்ைத இன்ஜினியரிங் கல்விக்கான உயர் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தை பல்கலைக்கழக நிர்வாகமே  வடிவமைக்கிறது. இந்நிலையில் 2019 ஜூன் மாதம் ஏஐசிடிஇ வெளியிட்ட வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேர்ந்த மாணவர்களுக்கு பாடத்திட்டம் சாராத 32 பாடங்களில் 3 பாடங்களை விருப்பப்பாடமாக தேர்வு செய்து 3வது, 4வது,  5வது செமஸ்டரில் படிக்க வேண்டும் கூறியிருந்தது. சமுதாயத்தில் தொழில்நுட்பகல்வி, மதிப்புகள் மற்றும் தர்மம், தர்மமும்  சிறந்த வாழ்க்கை முறையும், புகைப்படம், வீடியோ எடுத்து ஆவணப்படுத்துதல் என 32 பாடங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாக  கல்லூரிகளான காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி, ஸ்கூல் ஆப் ஆர்க்டெக்சன் அன்ட் பிளானிங், அழகப்பா காலேஜ் ஆப் இன்ஜினியரிங், குரோம்பேட்டையிலுள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 4 கல்லூரிகளில்  முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பாடப்பிரிவு வாரியாக விருப்ப பாடங்களை தேர்வு செய்தனர்.

 அதில் பி.டெக்(தகவல் தொழில்நுட்பம்) மாணவர்கள் மொத்தமுள்ள 12 பாடங்களில் தத்துவவியல் பாடத்தை தேர்வு செய்தனர். தத்துவியல் பாடத்தின் 5வது யூனிட்டில் ‘‘அறிவே ஆற்றல்’’ என்ற தலைப்பில் நம்முடைய ஆற்றலை உணர்வது  தொடர்பாக கீதையில் கூறப்பட்டுள்ளவை, மனதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அர்ஜூனனுக்கு கிருஷ்ணரின் உபதேசங்கள் ஆகியவை கொண்ட பகவத்கீதையை பாடமாக உள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகி புதிய பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.நமது நாட்டில் கடந்த சில மாதங்களாகவே, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மத்திய பணிகளில் மட்டுமல்லாமல், தமிழக  பணிகளிலும் சேர்த்துள்ளதற்கு எதிர்ப்பு போன்றவைகளால் தமிழகத்தில் சர்ச்சைகளாகவே உள்ளன. மேலும், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், சட்டப் பல்கலைக்கழகம், இசைப் பல்லைக்கழகங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை  நியமித்ததற்கும் எதிர்ப்பு இருந்து வருகின்றன. இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகம் திடீரென்று பகவத்கீதையை பாடமாக கொண்டு வந்ததற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.இது மதச்சார்பின்மைக்கு எதிரானது எனவும், மதச்சார்பற்ற நாட்டில் திட்டமிட்டு பாடத்திட்டத்தில் மத விஷயங்களை சேர்ப்பதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர்,  எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கீதை தொடர்பான விஷயங்கள் திட்டமிட்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று நேற்று மாலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா  விளக்கம் அளித்தார்.  அதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஏஐசிடிஇயின் புதிய பாடத்திட்டத்தின்படி, 32 பாடங்களை பரிந்துரைத்துள்ளது. மாணுடவியல், சமூகவியல், கலை சார்ந்தவை அந்த பட்டியலில் இருந்தது. இன்ஜினியரிங் படிக்கும்  மாணவர்கள் பிற விஷயங்கள் தொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பது ஏஐசிடிஇயின் நிலைப்பாடு.

மொத்தமுள்ள 32 பாடங்களில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் எந்தெந்த பாடங்களை நடத்துவதற்காக தகுதி பெற்றுள்ளனர், அதுதொடர்பாக படித்துள்ளார்கள் என்று பார்க்கப்பட்டது. ஏஐசிடிஇ குறிப்பிட்டவற்றில் அவற்றில் 12 பாடங்களை  நடத்த அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் தகுதி பெற்றிருந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் தொழில்நுட்பம் மட்டுமல்லாது தத்துவவியலிலும் பட்டம் பெற்றுள்ளார். குறிப்பிட்ட 12 பாடங்களில் மாணவர்கள் 3 பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். தற்போது பி.டெக் தகவல் தொழில்நுட்பம் மாணவர்கள் 3வது செமஸ்டரில் தத்துவவியல் படிப்பை தேர்வு செய்துள்ளனர். பி.டெக் தகவல் தொழில்நுட்ப  மாணவர்கள் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் 3வது  தத்துவவியல் படிப்பதாக இருந்தது. குறிப்பிட்ட தத்துவவியல் பாடத்தில் பழங்கால நாகரீகம், கிரேக்க, ரோமானிய நாகரீகம்,  மேற்கத்திய நாடுகள், கிழக்கு நாடுகளின் நாகரீகங்களின்  ஒப்பீடு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. தத்துவவியல் பாடத்தை தேர்வு செய்தது மாணவர்கள் தான். மாணவர்கள் தத்துவியல் படிக்க விரும்பாவிட்டால், விருப்ப பாடத்தை  மாற்றிக்கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக்குழு  கூட்டத்தில்  அதற்கான விதி உருவாக்கப்படும். தத்துவவியல் படிக்க விரும்பாத மாணவர்கள் மீதமுள்ள பாடங்களில் ஒன்றை தேர்ந்ெதடுத்து படிக்கலாம்.

மாணவர்கள் மீது மதத்தையோ, கீதையையோ, பிற விஷயங்களையோ திணிக்கவில்லை. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு எதுவுமில்லை. ஏஐசிடிஇ வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளவற்றை அண்ணா பல்கலைக்கழகம்  பின்பற்றியுள்ளது. விருப்பப்பாடப்பட்டியல் நடைமுறை ஐஐடியில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவதே பாடத்திட்ட மாற்றத்தின் நோக்கம். அதனால் இதுதொடர்பாக  கவலைப்பட தேவையில்லை. தத்துவவியல் பாடம் கட்டாயப்பாடமல்ல. மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம். இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறினார்.

விளக்கம் அளிக்க அமைச்சர் உத்தரவு
பாடத்திட்டத்தில் கீதை சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட நிர்வாக குழுவினரை தொலைபேசியில் அழைத்து பேசியதாக  கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ள பதிவாளர், கூடுதல் பதிவாளர், கல்விக்குழு இயக்குனர் இன்று நேரில் வந்து சந்தித்து விளக்கம் அளிக்குமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

தன்னாட்சிகல்லூரிகளில்கீதை தொடருமா?
ஏஐசிடிஇயின் பாடத்திட்டத்தில் கூறியுள்ளவற்றை தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் பாடத்திட்டத்தில் சேர்த்து தான் ஆக வேண்டும். அவ்வாறு பாடத்திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளாத பட்சத்தில் அவற்றின் அங்கிகாரத்தை ஏஐசிடிஇ  ரத்து செய்யலாம். தமிழகத்தில் 30க்கும் அதிகமான தன்னாட்சி அதிகாரம் பெற்ற இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எந்ததெந்த கல்லூரிகள் தத்துவியல் பாடத்தை தேர்வு செய்துள்ளன. அங்கு கீதை நடத்தப்படுமா என்ற சந்தேகம்  எழுந்துள்ளது.

Tags : Inge ,Anna University ,Academics ,Eng , Running , Anna University, Colleges, Censorship ,Leaders , Academics
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...