லக்னோ: முத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவிததொகை வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். முஸ்லிம்கள் பெண்கள் காலங்காலமாக தங்கள் கணவர்களால் மூன்றுமுறை தலாக் கூறி விவகாரத்து செய்யபப்படும் முறையை தடைசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு சட்டம் இயற்ற மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. அதன்படி முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த முத்தலாக் தடைச் சட்டத்தின்படி முஸ்லிம் பெண்களுக்கு எதிராக முத்தலாக் கூறும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் முறைக்கு கடும் எதிர்ப்பும், ஆதரவும் நிலவுகிறது. முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதிலும் நாட்டின் பல பகுதிகளில் முத்தலாக் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அதிகமாக முத்தலாக் புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்டு வழக்கு நடத்தி வரும் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதன்படி முத்தலாக் வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை பெண்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் பொருளாதார பிரச்சினைகளை அவர்கள் ஒரளவு எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.