திண்டுக்கல்: திண்டுக்கல் முருகபவனம், மலைக்கோட்டை பின்புறம் உடைந்த பாலங்களால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். திண்டுக்கல் ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்டது முருகபவனம் இந்திராநகர். 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட போது இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. ஆனால் அடிப்படை வசதிகளோ ஊராட்சியாக இருந்த போததைவிட மிகவும் மோசமாக உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து சமூகஆர்வலர் செல்லப்பாண்டி கூறுகையில், ‘இப்பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிடம் என எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
எங்கள் பகுதிக்குள் நுழையுமிடத்தில் இருந்த தரைப்பாலம் உடைந்து பல மாதங்களாகி விட்டது. ஆனால் அதை சரிசெய்து தர வேண்டி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது அடிக்கடி கீழே விழுந்து காயமுறுகின்றனர். இதேபோல் திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள அகஸ்தியர் விநாயகர் கோயில் அருகே தரைப்பாலம் சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்காமல் உள்ளது. இங்கும் பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் 2 பாலங்களை சீரமைப்பதுடன் அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தர வேண்டும்’ என்றார்.