சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் அதிகளவில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும், கஞ்சா பதுக்கி வைத்திருக்கும் நபர்கள் குறித்தும் கடந்த வாரம் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். அதைதொடந்து போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தியதாக செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த மணி (எ) கீரைமணி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா விற்பனை கும்பலான ரவுடிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்த பட்டினப்பாக்கம் மக்களை அச்சுறுத்தும் வகையில், 10 பேர் கொண்ட ரவுடி கும்பல் ேநற்று முன்தினம் நள்ளிரவு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் சாலையில் பொதுமக்கள் நிறுத்தி வைத்திருந்த கார்கள், பைக்குகள், வேன்களை அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கினர்.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவத்தில் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பட்டினப்பாக்கம் காவல் நியைத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்ட 10 சிசிடிவி கேமராக்களை பார்த்த போது எதுவும் வேலை செய்யவில்லை. இதனால் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல் யார் என்று தெரியாத நிலை ஏற்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதி மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.