சென்னை: நாடு முழுவதும் ரயில்வே சேவையை தனியார் மயமாக்கும் முயற்சியில் ரயில்வே துறை தீவிரமாக ஈடுபட்டுகிறது. ரயில் நிலையங்களை தனியார் வசம் ஒப்படைத்தல், ஒரு குறிப்பிட்ட வழிதடத்தை தனியாரிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட அம்சங்களில் தனியார்மயத்தை அரசு திட்டமிட்டுவருகிறது. இதற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த எதிர்ப்பையும் மீறி, ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ - டெல்லி வழித்தடத்தில் இயங்கும் தேஜஸ் ரயில் தனியார் மூலம் விரைவில் பயணத்தை தொடங்க உள்ளது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் தனியார் மூலம் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை - மதுரை, சென்னை - கோயம்புத்தூர், சென்னை - பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தவிர்த்து சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில் சேவையும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் ரயில்வே தனியார்மயமாகும் பட்சத்தில் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ரயில்வே ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, ரயில்வே தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் எழும்பூரில் இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் போராட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் ஒருவர் தெரிவித்தார்.