×

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு 4வது நாளாக விசாரணை: டெல்லி உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் 4வது நாளாக விசாரணை நடத்தியது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் கடந்த 11ம் தேதி தொடர்ந்த வழக்கு நேற்றோடு 4வது நாளாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. முன்னதாக, ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் முன்பு நேற்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், ‘‘ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீடு செய்ய சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

அப்படியெனில் இங்கு எந்த இடத்தில் சட்டவிரோத பரிவர்த்தனை நடந்துள்ளது என்பது புரியவில்லை. இந்த வழக்கில் இதுவரை எந்த ஆதாரமோ அல்லது ஆவணங்களோ குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக இல்லை. அதேபோல கணக்கில் காட்டாத வங்கி கணக்கோ, சொத்தோ ப.சிதம்பரத்துக்கு கிடையாது. சொந்த மகளையே கொலை செய்த இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ப.சிதம்பரத்தை தற்போது சிபிஐ கைது செய்துள்ளனர். இதில் உண்மைஇருந்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏன் இந்திராணி முகர்ஜி வாக்குமூலமாக தெரிவிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

 இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில், “வழக்கில் ஆதாரங்கள் உள்ளன. அதனால், இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. மேலும், சிதம்பரத்தின் தரப்பில் தற்போது நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் அனைத்தையும் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்,’’ என்றார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.




Tags : PI Chidambaram ,bail plea hearing ,bail hearing , INX Media Abuse. P Chidambaram, Delhi High Court,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...