திருமலை: ஆந்திராவில் 6 மாத பெண் குழந்தை, மின்சார பல்பை தொட்டால் அது பிரகாசமாக எரியும் அதிசயம் நிகழ்கிறது. இதற்கான காரணம் குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆந்திராவின் விலினாமண்டலம், தாமலசெருவு கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு. இவரது மனைவி சுஷ்மிதா. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தையின் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதாக அதன் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரிபாபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீட்டு வேலையில் இருந்தனர். குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே வாங்கி வைத்திருந்த எல்இடி பல்பை குழந்தை கையில் எடுத்துள்ளது. குழந்தை தொட்டதும் திடீரென அந்த பல்ப் எரிந்தது. இதனை கண்ட ஹரிபாபுவும் சுஷ்மிதாவும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையின் உடலில் வைத்தபோதும் அந்த பல்பு எரிந்துள்ளது. இதனால் உடனடியாக குழந்தையை தூக்கிச்சென்று அங்குள்ள தனியார் டாக்டரிடம் காண்பித்தனர்.
குழந்தையை தீவிரமாக பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை உடலில் மின்சாரம் இருப்பதாக தெரிவித்தனர். மனித உடலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மின்சாரம் இருக்கும். அதில் இக்குழந்தைக்கு கூடுதலாக இருப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. இதுபோல் லட்சத்தில், கோடியில் ஒருவருக்கு இருக்கும். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று டாக்டர்கள், பல ஆச்சரிய தகவல்களை தெரிவித்தனர். இதன்பிறகே ஹரிபாபு, சுஷ்மிதா தம்பதி நிம்மதியடைந்தனர்.
இதற்கிடையே குழந்தை தொட்டால் பல்பு எரியும் தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. இதையறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்தும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தும் செல்கின்றனர்.