×

பண்டிகை காலங்களில் தாக்குதல் நடத்த திட்டம்: 2 மாதங்களில் 60 தீவிரவாதிகள் ஊடுருல்....உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவில் பண்டிகை சமயங்களில் தாக்குதல் நடத்தும் எண்ணத்தோடு 2 மாதங்களில் 60 தீவிரவாதிகள் வரை ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் தீவிரவாத இயக்கங்கள் முன்பைவிட வன்மத்துடன் இருப்பதாக உளவுத்துறை  விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 5 இடங்கள் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்க வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த  ஆண்டுகளை விட நடப்பாண்டில் தாக்குதலை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த 2 மாதங்களில் 60 தீவிரவாதிகள் வரை ஊடுருவியிருப்பதாக அந்த எச்சரிக்கையில்  கூறப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இருந்ததை விட தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாகவும் எச்சரிக்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை, பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி உள்ளது. இங்கு, இளம் அதிகாரிகள் பயிற்சி பிரிவு துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.  இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் துவக்கி வைத்தார். ராணுவ பயிற்சி அதிகாரிகள் மேஜர் ஜெனரல் அருண், சஞ்சீவ் கனல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பிறகு, திறன் மிகுந்த 200 ராணுவ வீரர்களுக்கு திறன் மேம்பாடு, தலைமை பண்பு, படை நிர்வகிக்கும் திறன், கல்வி திறன், வீரர்களுக்கு உத்தரவிடும் திறன் போன்றவை  பற்றி முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.   

இதனை தொடர்ந்து, பிபின் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை ‘சர்ஜிக்கல்  ஸ்டிரைக்’ நடத்தியது. இந்த நடவடிக்கையால் தீவிரவாதிகளின் தளம் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது எப்போது வேண்டுமானாலும் மீண்டும்  செயல்படுத்தப்படலாம். தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் தள்ளிவிட்டு, பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது.  இந்திய எல்லைக்குள் ஊடுருவ 500  தீவிரவாதிகள் தயார்நிலையில் பாகிஸ்தான் தனது எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது என்றார். இந்த நிலையில் தற்போது உளவுத்துறை இந்த எச்சரிக்கையை  வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : attacks ,seasons ,militants , Plan to launch attacks in festive seasons: 60 militants infiltrate in 2 months .... intelligence alert
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி