பெரம்பூர்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 28 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாணவ மாணவிகளுக்கான புதிய விடுதி கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சரோஜா, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்று, விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவை மையத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தல் மற்றும் கல்லூரி ஆண்டு விழாவை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.