தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பைபாஸ் அருகே வீருநாகம்மாள் கோயில் உள்ளது. இதன் அருகே நடுரோட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பெருமாள்(55) மற்றும் அவரது நண்பர் சேர்ந்து நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டனர். இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது தேவதானப்பட்டியில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் சாலையின் நடுவே சாப்பிட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்ய வேண்டாம் என தடுத்த அதே பகுதியைச் சேர்ந்த தங்கேஸ்வரனுக்கு பெருமாள் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து தங்கேஸ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து பெருமாளை கைது செய்தனர். அவருடன் சாலையில் அமர்ந்திருந்த மற்றொருவரை தேடி வருகின்றனர்.