புதுடெல்லி: `இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் வழங்கப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு வந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின்போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பரிசீலிக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரைத்தார்.
இந்நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து ஆதார் ஆணையம் சுற்றறிக்கையொன்றை நேற்று வெளியிட்டது. அதில், `இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் முன்னதாகவோ அல்லது வருகையின் போதோ தங்களது உடற்கூறு பதிவுகளுடன் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு உடனடியாக ஆதார் வழங்கப்படும். 182 நாட்கள் காத்திருக்க தேவையில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.