சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சியானது, அடுத்த 3 நாட்களும் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், வடதமிழக மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
இன்று ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 24ம் தேதி வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், 25ம் தேதி கடலோர மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 24, 25 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், தென்தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வலிமையான சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் அப்பகுதி கடலுக்கு இரண்டு நாட்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் தருமபுரி மாவட்டம் பாலக்கோடுவில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 9 செ.மீ, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலங்குடி, தருமபுரியில் தலா 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது, என்று தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.