×

தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு!

சென்னை: தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளார் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றார். தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை தேர்தல் வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை, ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் வழங்கினார் என்றும் அவரின் வெற்றிச் செல்லாது என்றும் தெரிவித்திருந்தார்.

இதே வழக்கை அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தான குமாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் வாக்காளர் சந்தான குமார் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு கடந்த வாரத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டிருந்த தமிழிசையின் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜரானார். ஏற்கெனவே கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தனியாக ஒரு தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கையும் அதனுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த இரு வழக்குகளிலும் கனிமொழி உட்பட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 23ம்(இன்று) தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்துள்ளார். தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று தமிழிசை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டிசை அரசிதழில் வெளியிட உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், வழக்கை தொடர்ந்து விசாரிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து அக்டோபர் 14ம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.



Tags : withdrawal ,Tuticorin Soundararajan ,Kanimozhi ,announcement withdrawal ,Tamilisai Soundararajan , Tuticorin, Kanimozhi, Election case, Tamilisai Soundararajan, withdrew
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...