சென்னை: விருகம்பாக்கம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது வீட்டில் மாங்காட்டை சேர்ந்த வசந்தா (59) என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த வீட்டில் 30 அடி உறை கிணறு உள்ளது. இதன் மூடி சற்று உடைந்து இருந்ததால் அதை துணியால் மறைத்து வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இதை கவனிக்காத மூதாட்டி வசந்தா உறை கிணற்றின் மூடி மீது கால் வைத்தபோது, கிணற்றிக்குள் விழுந்து உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மகேஷ்குமார் ஓடி வந்து கயிறை கிணற்றிக்குள் விட்டு காப்பாற்ற முயன்றார். ஆனால் குறுகிய கிணறு என்பதால் முடியவில்லை. இதையடுத்து மகேஷ்குமார் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்படி தீயணைப்பு அதிகாரி ஆரிபா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி வசந்தாவை கயிறு உதவியுடன் லேசான காயங்களுடன் மீட்டனர்.