ஹாங்காங்: ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுரங்க ரயில் நிலையத்தை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். ஹாங்காங்கில் குற்ற வழக்கில் சிக்கியவர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் முதல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த மசோதாவை ரத்து செய்வதற்கு அந்நாட்டின் தலைவர் கேரி லேம் ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், போராட்டம் 4வது மாதத்தை எட்டியுள்ளது. மசோதா ரத்து செய்யப்பட்டாலும், அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பிற்பகல் ஷாதின் சுரங்க ரயில் நிலையத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கினார்கள். எலக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரங்களை சுத்தியால் அடித்து உடைத்தனர். ரயில் நிலையத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள் தங்களது முகத்தை மறைக்கும் வகையில் குடைகளை கொண்டு வந்திருந்தனர். ரயில் நிலையம் மீதான தாக்குதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். பின்னர் ரயில் நிலையம் மூடப்பட்டது. இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு, இதுபோன்ற தீவிரமான நடவடிக்கைகள் தேவை. அதனால்தான் விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்,’ என்று தெரிவித்தனர்.