பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே இறந்த கோயில் காளைக்கு திரளான பொதுமக்கள் மாலை மற்றும் வேஷ்டி அணிவித்து அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கோவணூரில் பொன்னழகிஅம்மன் கலிங்கிக்கருப்பர் கோயில் உள்ளது இக்கோயிலுக்கு சொந்தமாக காளை வளர்க்கப்பட்டு வந்தது. கோவணூர் ஊர் மக்கள் பராமரிப்பில் இருந்து வந்த இந்த கோயில் காளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டில் பங்குபெற்று வெற்றி வாகை சூடிவந்தது.
20வயது உடைய இந்த காளை கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (21ம் தேதி) காளை இறந்தது. இதனையடுத்து கிராமமக்கள் சுவாமிக்கு அணிவிப்பது போல வேஷ்டி, மாலைகள் அணிவித்தனர். இதனையடுத்து மேளதாளங்களுடன் மக்கள் ஒன்று கூடி ஊர்வலமாக எடுத்துச் சென்று கண்ணீருடன் பொன்னழகி அம்மன் கோயில் அருகே காளையை அடக்கம் செய்தனர்.