பழநி: விடுமுறை தினத்தை முன்னிட்டு பழநியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் வார விடுமுறையின் காரணமாக பழநி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. ரோப்கார் இயங்காததால் வின்ச் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணம் செய்தனர். அதிகக் கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறைப்படி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. பக்தர்கள் வந்த வாகனங்கள் சுற்றுலா பஸ் நிலையத்தில் நிறுத்தப்படாமல் கிரிவீதியில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடிவாரத்தில் உள்ள சில உணவுக்கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்படவில்லை. இதனால் பக்தர்களிடம் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. ஐப்பசி மாதம் துவங்கி வைகாசி மாதம் வரை பழநிக்கு சீசன் நேரம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். எனவே, மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதலுக்கு கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டுமென்றும், உணவுப்பொருள் தரமானதாக, சரியான விலையில் பக்தர்களுக்க கிடைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.