×

ஆத்தூர் அருகே தாமிரபரணியில் புதைந்து கிடக்கும் கட்டிடங்கள்: கீழடியை போன்று அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா?

ஆறுமுகநேரி:  ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆறு வறண்டதால் மண்ணில் புதைந்து கிடந்த கொற்கை மன்னன் காலத்து  கட்டிடங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. கீழடியை போன்று இங்கும் அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா என்ற கேள்வி  எழுந்துள்ளது. நெல்லை  மாவட்டம், பொதிகை மலையில் உற்பத்தியாகி இரு மாவட்டங்கள் வழியாக  பாய்ந்தோடி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வளம் சேர்ப்பது தாமிரபரணி  ஆறு. பொருநை நதி என்ற பெயரும் இதற்கு உண்டு. வற்றாத ஜீவநதி எனப்  பெயர் பெற்ற  தாமிரபரணி, கடுமையான கோடை காலங்களில் மட்டுமே சில இடங்களில் வற்றுமே  தவிர எப்போதும் ஆற்றின் நீர் போக்குவரத்து இருந்துகொண்டே  இருக்கும். தாமிரபரணிக்கு  சிறப்பு சேர்க்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு  மாதத்திற்கு மேலாக புஷ்கர விழா  மிகச் சிறப்பாக நடந்தது.

தாமிரபரணியில் மழைக் காலங்களில் கடலுக்கு தண்ணீர் வீணாகச் செல்வதால் பல  இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு நிலத்தடிநீர் சேமிக்கப்பட்டு வருகிறது.   இது மிகவும் பயனுள்ளதாக இருந்த போதிலும் ஒரு சில இடத்தில் தடுப்பணை  கட்டியதால் ஆறு வற்றும் நிலைக்கும் வந்துவிட்டது.  குறிப்பாக  தூத்துக்குடி மாவட்டம், முக்காணி ஆற்றுப்பாலத்திற்கு கிழக்கே ஒரு தடுப்பணை  ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது.  இதனால் ஒருபுறம் பொதுமக்கள்  பயனடைந்தபோதிலும்,  உமரிக்காடு வரை சென்ற தண்ணீர் தற்போது கீழ் பகுதி  தடுப்பணையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பல  நூற்றாண்டு காலமாக வற்றாத ஜீவ நதியாக இருந்த தாமிரபரணி ஆறு தற்போது வறண்டு  விட்டது. கடந்த ஒரு  மாதமாக இந்த நிலை நீடிக்கிறது.  

ஆறு வறண்ட போதும்  ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அப்பகுதிக்கு சென்ற சமூக  ஆர்வலர் ஆத்தூர் நெடுஞ்செழியபாண்டியன்(56) ஆற்றில் பழைய கட்டிடங்கள்  புதைந்து கிடப்பதை பார்த்தார். அவை கற்கள் மற்றும்  செங்கலால்  கட்டப்பட்டுள்ளன. சுமார் 300 அடி அகலத்திற்கு கட்டிடம் இருந்தது. அவைகள்  சுண்ணாம்பு மற்றும் சுட்ட செங்கற்கலால் கட்டப்பட்டிருப்பதால் கட்டிடம்  மிகவும் உறுதியாக உள்ளது. இதுகுறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி  உள்ளன. இந்த கட்டிடங்கள் கொற்கை மன்னன் காலத்தில் கட்டப்பட்டது என  தெரிகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் மதுரையை பாண்டிய நெடுஞ்செழிய மன்னன்  ஆட்சி புரிந்து வந்தான்.  திறம்பட ஆட்சி புரிந்த அந்த மன்னரின் ஆட்சியில்தான்  மன்னன் கள்வன் என கண்ணகி குற்றச்சாட்டியதால் மன்னன் உயிர் துறந்தான். அந்த  மன்னன் உடன்பிறந்த சகோதரன்தான் வெற்றிவேல் நெடுஞ்செழியன்.

அண்ணன் மதுரையை  ஆட்சி  செய்ய, தம்பி வெற்றிவேல் நெடுஞ்செழியன் தூத்துக்குடி மாவட்டத்தில்  உள்ள கொற்கையை ஆண்டு வந்தான். இவன் காலத்தில் கடல் வணிகம் கொடிகட்டி  பறந்துள்ளது. இதற்காக கொற்கையில் துறைமுகம் அமைத்து வணிகத்தில்  ஈடுபட்டான்.  அந்த மன்னர் காலத்தில் அப்பகுதியில் வணிகம் செய்ய வசதியாக  கட்டிடங்கள், அல்லது துறைமுகத்திற்கு நுழைவு வாயிலாகவோ ஆற்றில்  கட்டிடங்கள் கட்டியிருக்கலாம். மேலும் மன்னன் தங்கி செல்வதற்கு வசதியாக  இந்த  பகுதியில் அரண்மனை கூட கட்டியிருக்கலாம் என தெரிகிறது. அண்ணன் உயிர்  துறந்த செய்தியறிந்து துடித்துப்போன வெற்றிவேல் நெடுஞ்செழியன் கொற்கை  ஆட்சியை தளபதிகளுடன் ஒப்படைத்து விட்டு மதுரைக்கு சென்று ஆட்சி   பொறுப்பை ஏற்றான் என வரலாறு கூறுகிறது.  தற்போது ஆற்றில் தெரியும்  கட்டிடங்கள், கொற்கை மன்னன் காலத்தில் உள்ளதுதான் என சமூக ஆர்வலர்  நெடுஞ்செழியபாண்டியன், ஆறுமுகநேரி தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்    தவசிமுத்து ஆகியோர்  தெரிவித்தனர்.

ஆற்றில் பழமையான  கட்டிடங்கள் தென்படும் செய்தி அறிந்து அருகில் உள்ள ஊர் மக்கள், அரசு  மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாக சென்று  பார்த்து வருகிறார்கள்.இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழக உயிரியல்  துறை தலைவர் சுதாகர் கூறுகையில், இங்கு  புதைந்திருக்கும் கட்டிடங்களில் கடலில் வாழும் சுப்பி இன பூச்சிகள்  அதிகளவில் வாழ்ந்துள்ளன.  இதனால் ஒரு  காலத்தில் கடலில் ஏற்பட்ட மாற்றத்தில்  இந்த இடங்கள் கடல் நீரால் முழ்கியிருக்கலாம். பின்னர் ஏற்பட்ட  மாற்றத்தினால் கடல் உள்வாங்கி, ஆற்றின் போக்கு திசைமாறி  சென்றிருக்கலாம். இங்குள்ள கட்டிடங்களின் சுவர்கள் 6 அடி முதல் 8  அடிவரை  அகலமாக உள்ளது. எனவே கீழடியை போன்று இங்கும் அகழ்வாராய்ச்சி நடத்தினால் வரலாற்று உண்மைகள் உலகுக்கு புலப்படும். பண்டைய தமிழ் நாகரிகத்தின் பெருமைகள் தெரியவரும்,  என்றார்.

தாமிரபரணி  ஆற்றங்கரையில் பல அரிய  பொக்கிஷங்கள் இருப்பது தற்போது வெளிவரத் தொடங்கி  உள்ளது. ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம்  அருகே ஆதிச்சநல்லூரில் பழங்காலத்து முதுமக்கள்  தாழி, பண்டைய  காலங்களில் மக்கள்  பயன்படுத்திய அரிய ஆயுதங்கள்,  மண்பாண்டங்கள்  கிடைத்துள்ளன. இங்கு அகழ்வாராய்ச்சி நடந்து  வருவதோடு. ஆதிச்சநல்லூர் பெயர் இந்தியா மட்டுமின்றி,  அமெரிக்கா உள்ளிட்ட  வெளிநாடுகளிலும் பரவியிருக்கிறது. இப்போது கொற்கை   மன்னனால்  கட்டப்பட்டதாக கூறப்படும் கட்டிடங்கள் தாமிரபரணிக்கு  மேலும் பெருமை சேர்ப்பதாகும். எனவே இங்கும் ஆய்வு செய்தால் பண்டைய தமிழர் நாகரிகம், தொண்மை வெளிப்படும். ஆதிச்சநல்லூர், கீழடியை போல் இங்கும் அகழாய்வு நடத்த வேண்டும் என்பது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின்  விருப்பமாகும்.

 ‘‘பெரியகோட்டை இருந்திருக்கலாம்’’:

இங்கு ஆய்வு நடத்திய சிவகளையை சேர்ந்த தொல்லியல்  துறை  ஆராய்ச்சி மாணவர் மாணிக்கம்,   நெல்லை தொல்லியல் ஆய்வாளர் ஹரீஸ் ஆகியோர் கூறுகையில், யாழி, அன்னப்பறவை, வால் கொண்டு மனித உருவ சிலை, பெண்  தெய்வ சிற்பம்   ஆதிச்சநல்லூரில் கிடைத்தது போன்று இரு கலர் கொண்ட முதுமக்கள் தாழி   உதிரிபாகங்கள் கிடைத்துள்ளது. இப்பகுதியை சுற்றி பெரிய   கோட்டை இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டது.  இங்கு கிடைத்த கற்கள்,    செங்கற்கள் மருதூர் அணையிலும் உள்ளது. படகுகள் நிறுத்துவதற்கான   பெரிய கல் நங்கூரம் கிடைத்துள்ளது. கொற்கை மன்னன் காலத்தில் இந்த   கட்டிடங்கள் சிதைந்து போனதால் அதன்பிறகு வந்த நாயக்கர் மன்னர்கள் இந்த    கோட்டையை சற்று சீரமைத்து இருக்கக் கூடும் என்றும், ஆங்கிலேயர் காலத்திலும் செங்கற்களால் இந்த கட்டிடங்கள் மேலும்   சீரமைக்கப்பட்டிக்கக் கூடும், என்றனர்.

பள்ளி மாணவர்கள் வியப்பு:

ஆத்தூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அங்குள்ள கட்டிடங்களின் உதிரி பாகங்களை கண்டு வியந்தனர்.   ஆசிரியர்கள் கட்டிடங்களின் சிற்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.   திருச்செந்தூர் அருகில் உள்ள காஞ்சி சங்கரா அகடமி பள்ளி  மாணவ,  மாணவிகளும் இங்குள்ள கட்டிடங்களை பார்த்துச் சென்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், இந்த பழமையான கட்டிடத்தை காலம் தாழ்த்தாது தொல்லியல்  துறையினர் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும், என்றனர்.  

துறைமுகம் இங்கு வரை இருந்ததா?:

கொற்கை  மன்னன் வெற்றிவேல் நெடுஞ்செழியபாண்டியன் 2500 ஆண்டுக்கு முன் ஆட்சி  செய்தபோது கொற்கையில் பெரிய துறைமுகம் இருந்துள்ளதாக தெரிகிறது.  அப்போது  வணிகம் சிறப்பாக நடந்து வந்துள்ளது.  தற்போது தாமிரபரணி  ஆற்றில் புதைந்த  கட்டிடங்கள் கொற்கை மன்னனின் சிறிய துறைமுகமாக இருந்திருக்ககூடும்  என்றும், கப்பலில் உள்ள பொருட்களை சிறிய படகுகளில் ஏற்றி இந்த பகுதிகளில்  கொண்டு வந்து சேமித்து வைத்திருக்கக் கூடும் என்று  தெரிகிறது. அதனால்தான்  படகுகளை கடலில் நிறை நிறுத்தும் கல் நங்கூரம் இங்கு கிடைத்துள்ளது என்ற கருத்து நிலவுகிறது.

Tags : buildings ,copper basin ,Attur ,Attur: Excavation ,Buried Buildings , Buried buildings in the copper basin near Attur: Excavation?
× RELATED பரனூர், ஆத்தூர் உட்பட 29...