பெங்களூரு: பண பரிமாற்ற முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 25ம் தேதி மதியம் வழங்குவதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2017ம் ஆண்டு கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாரின் டெல்லி வீட்டில் சோதனை நடத்தினர். அதில் ரூ.8.5 கோடி பணம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை டி.கே.சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களது காவல் முடிந்த நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டி.கே.சிவகுமார் சார்பில் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நேற்று சிறப்பு நீதிபதி குஹர் முன்னிலையில் நடந்தது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜ் வாதிடுகையில், ‘‘அரசுக்கு வரி செலுத்தாமல் வைத்துள்ள பணம் அனைத்தும் அரசுக்–்கு சொந்தமானது. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு சொந்தம் ெகாண்டாட டி.கே. சிவகுமாருக்கு உரிமையில்லை. அவருக்கு ஜாமீன் அளித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார். அத்துடன், கணக்கில் வராத பல ஆயிரம் கோடி பணம் பற்றி அவர் விசாரணையின் போது பேச மறுக்கிறார். அரசியல் பலம், பண பலம் இருப்பதால் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, அவரை ஜாமீனில் விடக்கூடாது,’’ என்றார். இதேபோல, டி.கே.சிவகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘‘7 முறை எம்,எல்.ஏ.வாகவும், பல முறை அமைச்சராகவும் இருந்துள்ள டி.கே.சிவகுமார், சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் உள்ளவர். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவோ அல்லது சாட்சிகளை கலைக்கும் முயற்சியிலோ ஈடுபடமாட்டார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்,’’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை 25ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார். பின்னர், டி.கே. சிவக்குமார் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.