×

நாமக்கல் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாப சாவு: பெண் கவலைக்கிடம்

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே லாரி மீது கார் மோதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் கபிலர்மலை மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கேசவன்(65). அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கண்ணம்மாள்(56). இவர்களது மகன் சரவணன்(34), பரமத்திவேலூரில்  ரெடிமேட் துணிக்கடை நடத்தி வந்தார். புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக, நேற்று முன்தினம் இரவு சரவணன் பெற்றோர் மற்றும் மனைவி வசந்தி(30), ஒன்றரை வயது மகன் சாய், அதே பகுதியைச்  சேர்ந்த உறவினர் ராஜேந்திரன் (64) ஆகியோருடன், ஒரு காரில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கள்ளனூர் பெருமாள் கோயிலுக்கு சென்றனர். நேற்று காலை மகனுக்கு மொட்டை போட்டு வேண்டுதல் நிறைவேற்றி, சுவாமி தரிசனம்  செய்துள்ளனர்.

 பின்னர், காலை 10 மணியளவில் ஊருக்கு புறப்பட்டனர். காரை சரவணன் ஓட்டி வந்துள்ளார். நண்பகல் 12 மணியளவில், நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மாணிக்கவேலூர் என்னுமிடத்தில் வந்த போது, திடீரென கார் தறிகெட்டு  ஓடியது. அவ்வழியாக நாமக்கல்லில் இருந்து துறையூர் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரிக்குள் கார் சொருகிக் கொண்டது. இந்த விபத்தில், சரவணன் உள்பட 6 பேரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்களும், எருமப்பட்டி போலீசாரும் வந்து லாரியில் சிக்கி கிடந்த காரை பிரித்து இடிபாடுகளுக்குள்  தவித்தவர்களை மீட்டனர். அதற்கள் ராஜேந்திரன், கேசவன், கண்ணம்மாள், குழந்தை சாய் மற்றும் சரவணன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். உயிருக்கு ேபாராடிய வசந்தியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். காரில் வந்தவர்கள் இரவு முழுவதும் பயணம் செய்து கோயிலுக்கு சென்றதும், அங்கு சுவாமி தரிசனத்தை முடித்த கையோடு, ஓய்வு  எடுக்காமல் ஊருக்கு புறப்பட்டதும் தெரிய வந்துள்ளது. காரை ஓட்டி வந்த சரவணன், கண் அயர்ந்ததால் இந்த விபத்து நடந்ததும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து, எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை ஓட்டி வந்த வீராசாமியை  கைது செய்தனர்.



Tags : car collision ,Namakkal Namakkal , car crashed,truck ,Namakkal,family die
× RELATED ஆத்தூர் அருகே கார்கள் நேருக்கு நேர்...