கோவை: கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, கோவையை சேர்ந்த சிலர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் வீதியில் டிராவல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சுரேஷ்(45) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சீரடி, கோவா, மும்பை மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் சுற்றுலா செல்வதற்காக சலுகை கட்டணங்களை அறிவித்தது. ஏராளமானோர் டிக்கெட் பதிவு செய்திருந்தோம். இந்தநிலையில், நேற்று காலை நிறுவனம் திடீரென மூடப்பட்டது. எங்களிடம் சுமார் 3 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே தலைமறைவான சுரேசை கண்டுபிடித்து எங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.