படோகி: உத்தர பிரதேசத்தில் குழந்தை கடத்தப்பட்டதாக கூறப்பட்ட புரளி காரணமாக இரு கிராமத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் குத்திக் ெகாலை செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம், படோகி மாவட்டத்தில் உள்ளது காந்தி கிராமம். இங்கு நேற்று முன்தினம் இரவு டிராக்டர் ஒன்று, அப்பகுதியை சேர்ந்த ஊனமுற்ற நபர் ஓட்டி வந்த மூன்று சக்கர சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து, தப்பிப்பதற்காக டிரைவர் டிராக்டரை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது டிராக்டர் மீது அப்பகுதி மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து ஊனமுற்ற நபரின் உறவினர்களும் பைக்குகளில் டிராக்டரை விரட்டி சென்றனர். அப்போது டிராக்டரில் சென்றவர்கள் தங்கள் சொந்த கிராமமான தானுபட்டியை அடைந்தனர். அங்கு சென்றதும் டிராக்டர் டிரைவரின் உறவினர்கள் பைக்கில் விரட்டி வந்தவர்களை முற்றுகையிட்டனர். இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் டிராக்டரில் வந்த குலாப் சந்த் பின்ட் (52) என்பவரை கத்தியால் குத்தினர். இதில் அவர் பலியானர். மேலும் 4 பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.