புதுடெல்லி: பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரிச்சலுகையால். அதன் உரிமையாளர்களான பெரும் செல்வந்தர்களே பயனடைகின்றனர். ஏழைகள் வழக்கம் போல தவிக்க விடப்பட்டுள்ளனர்,’ என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பாஜ தலைமையிலான மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து 5 சதவீதமாக இருக்கிறது. வாகன உற்பத்தி உள்பட பல்வேறு முக்கிய தொழில்துறைகள் முடங்கி உள்ளன. இதனிடையே, பொருளாதாரத்தை சீர்படுத்தும் நடவடிக்கையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் ₹1.50 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு கார்ப்பரேட் வரிச்சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `மத்திய அரசு ₹ 1.45 லட்சம் கோடி வரிச்சலுகை அளித்திருப்பதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குதான் ஹவ்டி மோடியின் தீபாவளி. ஆனால், தேவையில் இருக்கும் பொதுமக்களுக்கு தீபாவளி இல்லை. பெருநிறுவனங்களின் கையில் இருக்கும் இந்த உபரி பணத்தினால் தேவை அதிகரிக்காது. கிராம மக்களின் கையில் உபரியாக பணம் இருந்தால்தான் வாங்கும் சக்தியை அதிகரிக்க செய்ய முடியும். அரசின் இந்த நடவடிக்கையால் செல்வந்தர்கள் பயனடைவார்கள். ஆனால் ஏழைகள் தவிக்க விடப்பட்டுள்ளனர்,’ என்று கூறியுள்ளார்.