சென்னை: பதிவுத்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண புதிதாக பொறுப்பேற்கும் பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.பத்திரப்பதிவுத்துறை மூலம் கடந்த 2018-19ம் நிதியாண்டில் ₹11 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு எட்டப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் ₹13 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் பதிவில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக சார்பதிவாளர் புகார் அளித்தால் உடனடியாக சரி செய்யப்படுவதில்லை. இதனால், பதிவுப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சார்பதிவாளர் அலுவலகங்களில் 10 பத்திரங்கள் கூட ஒருநாளைக்கு பதிவு செய்வதே பெரும் சிரமமாக உள்ளது. இதனால், கடந்த 6 மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை கூட அடைய முடியவில்லை.
இதற்கு, சார்பதிவாளர்கள் காலி பணியிடங்களும் மற்றொரு காரணம். தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பாத நிலையில் உதவியாளர்கள் பலர் சார்பதிவாளர்கள் பொறுப்பை கவனித்து வருகின்றனர். அதே நேரத்தில் சார்பதிவாளர்கள் பலர் நிர்வாக பணிகளுக்கு சென்று விட்ட நிலையில் அவர்களும் பதிவுப்பணிக்கு வர மறுக்கின்றனர். இதனால், உதவியாளர்கள் பலருக்கும் பத்திரப்பதிவு பணியில் போதிய அனுபவம் இல்லாத நிலையில் பல நேரங்களில் அவர்களால் அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் இழப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில், வழிகாட்டி மதிப்பு குறைக்க கோரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரங்கள் நிலுவையில் உள்ளது. இந்த பத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஓரளவுக்கு வருவாய் ஈட்ட முடியும்.
இந்த சூழ்நிலையில், சார்பதிவாளர்கள் சங்கங்கள் சார்பில் திருமண பதிவுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக் வைத்துள்ளனர். ஏற்கனவே, பத்திரப்பதிவு பணியால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகம் உள்ள நிலையில், திருமண பதிவால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு மாவட்டங்களில் தனி அலுவலர் நியமனம் செய்யும் பட்சத்தில் திருமண பதிவுசான்றும் காலதாமதம் இல்லாமல் வழங்க முடியும். அதே நேரத்தில் பத்திரப்பதிவு பணியும் வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரியில் ஐஜியாக இருந்த குமரகுருபரன் மாற்றப்பட்டு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் தான் அந்த பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். அவருக்கு ஏற்கனவே பல பணிகள் இருப்பதால், அவரால் பதிவுத்துறை மீது முழு கவனம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில், தற்போது பதிவுத்துறை ஜஜி ஜோதிநிர்மலாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், பதிவுத்துறையில் மாற்றங்கள் கொண்டு வரும் பட்சத்தில், இப்பிரச்னைக்கு முடிவு எட்டப்படும் என்று சார்பதிவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது.