சென்னை: காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிரமாண்ட சிலையும், கொடி மரமும் நிறுவப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் இரா.மனோகரன் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, செயல்தலைவர் விஷ்ணுபிரசாத், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் வீரபாண்டியன், சிவராஜசேகரன், செல்வப்பெருந்தகை, ஜான்சிராணி, ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, ரஞ்சன் குமார், திருவான்மியூர் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் கண்ணன் உட்பட காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது. மேலும், அவரது நினைவை போற்றும் வகையில் 150 அடி உயர கொடிகம்பம் நடப்படவுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் வரிச்சலுகை அளித்துள்ளார். இதனால் பொருளாதாரம் சீரடைந்து விடும் என்று நினைக்கிறார். இது முடியாத காரியம்’’ என்றார்.சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்படும் 150 அடி உயர கொடிகம்பம் நான்கு டன் எடை கொண்டது. இதில், 30 அடி அகலமும், 45 அடி நீளமும் கொண்ட கொடி அமைக்கப்படுகிறது.