×

பேச்சுவார்த்தையில் உடன்பாடு..: புதுச்சேரியில் நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் இருந்தது. அதேபோல கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட தீபாவளி போனஸ் 11,000 ரூபாயை தரகோரியும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 4 பகுதிகளில் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் புதுச்சேரி அரசு பேருந்துகள் முற்றிலுமாக இயங்காததால், வெளியூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

இந்த நிலையில், 4வது நாளாக தொடர்ந்த இந்த போராட்டத்தின் எதிரொலியாக 3 மாத சம்பளத்தை ஊழியர்களின் வங்கி கணக்கில் புதுச்சேரி அரசு நேற்று செலுத்தியது. இருப்பினும், தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை. ஏனென்றால், அவர்களது முக்கியமான கோரிக்கைகளான தீபாவளி போனஸ், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்றவை தொடர்பாக எந்த வித பதிலும் சொல்லவில்லை. எனவே, 3 மாத சம்பள பாக்கியை வழங்கிவிட்டாலும், மற்ற கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில், புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : government transport workers ,Puducherry Negotiations ,Puducherry , Puducherry, government transport workers, strikes and protest withdrew
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்