நெல்லை : நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெள்ளாங்குழியில் பலதரப்பட்ட கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் காலை 7 மணி முதலே தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். 3-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திவான் முஜிபுர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. தற்பொழுது, புலியங்குடி மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் வியாபாரம் நடத்தி வருகிறார். இவர் குறித்து அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாத குழுக்களுடன் திவானுக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல நெல்லை மேலப்பாளையம் பகுதிகளில் 2 இடங்களில் இதேபோன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த இரு சோதனைகளுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட முஸ்லீம் அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்க இவர்கள் ஆதரவாக செயல்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக, தென்காசியிலும் இதேபோல என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து முழுமையான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின்படி,தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, ராமநாதபுரம், மதுரை மண்ணடி, மேலப்பாளையம் உள்பட பல பகுதிகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், சிலருக்கு சம்மன் அனுப்பியும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.