புதுடெல்லி: ‘ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முறைகேடு நடந்ததற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளதால் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது,’ என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ.யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கடந்த 11ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதற்கு பதில் அளிக்கும்படி சிபிஐ.க்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதையடுத்துசிதம்பரத்தின் ஜாமீன் மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில், ‘ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. மேலும், சட்ட விரோதமாக வெளிநாட்டில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் தற்போது சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறோம். இந்த சூழலில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினால் அவர் அனைத்து ஆதாரங்களையும் கண்டிப்பாக அழிக்ககூடும். அதனால், அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் முகாந்திரம் இல்லை எனக்கூறி நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.