மாஸ்கோ: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பாங்கல் வசப்படுத்தி உள்ளார். ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடந்து வரும் இந்த தொடரின் ஆண்கள் 52 கிலோ எடை பிரிவு அரை இறுதியில், கஜகஸ்தானின் சாகென் பிபோஸினோவுடன் நேற்று மோதிய பாங்கல் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றார். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக பாக்சிங் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பாங்கலுக்கு கிடைத்துள்ளது.
இன்று நடைபெறும் பைனலில் அவர் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஷாகோபிதின் ஸாய்ரோவை (உஸ்பெகிஸ்தான்) சந்திக்கிறார். வெண்கலம் வென்றார் கவுஷிக்: ஆண்கள் 63 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் களமிறங்கிய இந்தியாவின் மணிஷ் கவுஷிக் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் கியூபா வீரர் ஆண்டி கோம்ஸ் குரூஸிடம் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.