தாம்பரம்: சென்னை புறநகரான பழவந்தாங்கல், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், சேலையூர், சிட்லபாக்கம் போன்ற பகுதிகளில், பகல் நேரங்களில் திறந்து கிடக்கும் ஆள் நடமாட்டம் குறைந்த வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்த, வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சபானா (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* யானைகவுனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது, உரிய ஆவணங்களின்றி 2 கிலோ தங்க நகைகள் வைத்திருந்த பூபதி, செந்தில், குமார், திருப்பதி ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வருமானவரி துறையினரிடம் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
* முகப்பேர் பாரதி நகர் 1வது தெருவை சேர்ந்த கவுதம் (24) என்பவர், வீட்டின் அருகே பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர், இவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.
* திருமங்கலம் போலீசாரால் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த நாகராஜ் (40) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
* அம்பத்தூரை சேர்ந்த கங்காதரன் (60), நேற்று முன்தினம் மாலை பாடி மேம்பாலத்தில் மொபெட்டில் சென்றபோது, கார் மோதி இறந்தார்.
* புழல் அடுத்த புத்தாகரம், வானவன் நகரை சேர்ந்த மோகனசுந்தரி (49), நேற்று முன்தினம் மாலை புத்தாகரம் - சூரப்பட்டு சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், மோகனசுந்தரியை கீழே தள்ளி, அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு
தப்பினர்.
* ஐசிஎப் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் சுந்தர் (18), கடந்த 17ம் தேதி திடீரென வீட்டில் இருந்து காணவில்லை. இவரை போலீசார் தேடி வருகின்றனர்.
* கிழக்கு கடற்கரை சாலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்டோ மூலம் கஞ்சா விற்ற மாமல்லபுரத்தை சேர்ந்த கார்த்தி (எ) காத்தவராயன் (37), அவரது மனைவி பானுபிரியா (30) மற்றும் மூர்த்தி (24) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* புழல் கங்காதரன் தெருவை சேர்ந்த சிற்றரசு (19), நேற்று முன்தினம் மாலை, சக நண்பர்களுடன் புழல் அருகே ரெட்டேரியில் குளித்தபோது, நீரில் மூழ்கி இறந்தார்.
* வேளச்சேரி காந்தி ரோடு பஸ் நிறுத்தம் மற்றும் பைபாஸ் சாலையில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற புதுக்கோட்டை மாவட்டம் சாத்தியகுடியை சேர்ந்த ராஜபாண்டி (24), முருகேசன் (39), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாண்டி (24), கணபதி (29) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,035 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.