×

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை: சிபிஐ மீண்டும் அறிக்கை தாக்கல்

சென்னை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாருடைய தூண்டுதலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ல் அவருடைய முகாமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தது. இதை தொடர்ந்து உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்துக் கொண்டதாக புகார் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது தொடர்பாக முதல் அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்திருந்தது. அதில் விஷ்ணுபிரியா மரணத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இது தற்கொலை தான் எனவும் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை கோவை குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை கிட்டத்தட்ட 6 மாத காலமாக நடைபெற்றது. இந்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி சிபிஐ -க்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் 6 மாதத்திற்குள் அது மீதான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த மாதம் சிபிஐ இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை என்பதையும், அதனால் தங்களுடைய அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : suicide ,DSP Vishnupriya ,CBI , DSP Vishnupriya, suicide, instigation, no, CBI, report
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...