ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரம்பிய லாரி வெடித்து சிதறியதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 95 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெறுவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது முதல், தலிபான் பயங்கரவாத அமைப்பு தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாது அதிபர் தேர்தலும் வருகின்ற 28ம் தேதி நடைபெறவுள்ளதால் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்கும் விதமாக தலிபான் அமைப்பு தினம்தோறும் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று சாஹுல் மாகாணத்தில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தை குறி வைத்து தலிபான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரியானது அதன் அருகே இருந்த மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டதால் லாரி முழுவதுமாக வெடித்து சிதறி அங்கிருந்த 20 பேர் உயிரிழந்தனர். அவர்கள் நோயாளிகளாக இருக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் தங்களது குடும்ப உறுப்பினர்களை காண சென்ற பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 95 பேர் படுகாயமுற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலிபான்கள் ராணுவ பயிற்சி தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் ஆனால் குறி தவறி மருத்துவமனை அருகே வெடிகுண்டு வெடித்துள்ளது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.