முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையை அடுத்த மாங்குடி அரசு பள்ளியில் மாணவர்கள் உருவாக்கிய தோட்டத்தில் விளைந்த வெண்டைக்காய் சமைத்து மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.இதற்கு ஆசிரியர்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவுகளில் காய்கறிகளால் ஆன ரசாயனம் இல்லாத இயற்கையான சத்தான உணவுகளை அதிகளவில் வழங்கும் விதமாக காய்கறி தோட்டம் அமைக்க கல்விதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு சமீபத்தில் பல்வேறு காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் முத்துப்பேட்டையை அடுத்தமாங்குடி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி துறையால் வழங்கப்பட்ட விதைகளை தலைமையாசிரியர் ஆறுமுகம், உதவி ஆசிரியர் மகாதேவன் ஆகியோர் மாணவர்களிடம் வழங்கி பள்ளி வளாகத்தில் மினி தோட்டம் அமைக்க வழிகாட்டினர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய மாணவர்கள் பள்ளி வளாகத்தில் பல்வேறு வகை காய்கறி விதைகளை விதைத்து பராமரித்து வந்தனர். இந்தநிலையில் முதன்முதலில் வெண்டைக்காய் செடியில் ஏராளமான வெண்டைக்காய்கள் விளைந்தது. இதனையடுத்து நேற்று சுமார் 1 கிலோ அளவிலான வெண்டைக்காய்களை மாணவர்கள் பறித்து அங்குள்ள சத்துணவு பணியாளர்களிடம் சமைப்பதற்கு வழங்கினர். பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் வெண்டைக்காய் சமைத்து பரிமாறப்பட்டது. இந்நிலையில் பள்ளியில் ஆர்வத்துடன் ரசயானம் இல்லாத இயற்கையான காய்கறிகளை விளைவித்து வரும் மாணவர் களையும், ஊக்கப்படுத்தி வரும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து பாராட்டியதுடன் மாணவர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இது போன்று தோட்டம் அமைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.