×

எந்த மாநில மொழியின் மீதும் இந்தியை திணிக்க சொல்லவில்லை: கடும் எதிர்ப்புக்கு பணிந்தார் அமித்ஷா

புதுடெல்லி: ‘‘எந்த மாநில மொழியின் மீதும் இந்தியை திணிக்க வேண்டுமென ஒருபோதும் சொல்லவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 14ம் தேதி நடந்த இந்தி மொழி தின விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பல மொழிகள் பேசப்படுவது நம் நாட்டின் பலமாக இருந்தாலும் கூட, அந்நிய மொழிகளும் கலாச்சாரமும் நம் சொந்த அடையாளத்தை மாற்றி விடாமல் இருக்க தேசிய மொழி என ஒன்று இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி கொண்ட ஒரே மொழி இந்தி மட்டுமே. இந்தி மொழியைத் தான் நாடு முழுவதும் பெரும்பாலோனார் பேசுகின்றனர்’ என்றார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. ஒரே வரி, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் என்ற வரிசையில் ஒரே மொழி என இந்தியை திணிக்கும்  மத்திய அரசின் முயற்சியை நாட்டின் பல மாநிலங்களிலும், குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அமித் ஷாவின் இந்த இந்தி திணிப்பு பேச்சை கண்டித்தும், இந்தியை திணிக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் முழுவதும் நாளை (20ம் தேதி) போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இந்நிலையில், கடும் எதிர்ப்புக்கு பணிந்தார் அமித்ஷா. டெல்லியில் அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை. எந்த மாநில மொழியின் மீதும் இந்தியை திணிக்க வேண்டுமென ஒருபோதும் கூறவில்லை.

எனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்தே வந்திருக்கிறேன். தாய்மொழிக்குப் பிறகு இரண்டாவது மொழி ஒன்றை கற்க வேண்டும் என்றால், அது இந்தி மொழியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றே கூறினேன். சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம்,’’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி?
தமிழகத்தை பொறுத்தவரையில், இரு மொழி கல்விக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் 3வது மொழியாக இந்தியை கட்டாயப்படுத்த வேண்டுமென தேசிய கல்விக் கொள்கை வரைவு வெளியான போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், அமித்ஷா தனது விளக்கத்தில், ‘தாய்மொழிக்கு அடுத்ததாக 2வது மொழியாக இந்தியை கற்க வேண்டும்’ என கூறியிருக்கிறார். அப்படியெனில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை படிக்கச் சொல்கிறாரா என்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘3வது மொழியாக கூட இந்தி ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், 2வது மொழியாக அதை எப்படி ஏற்க முடியும்?’ என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : Amit Shah ,Amit Shah No State , State language, Hindi, Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...