மொகாலி: ரிஷப் பந்த் பயமில்லாத ஆட்டம் - கவனக்குறைவு ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் தெரிவித்துள்ளார். இந்திய சீனியர் கிரிக்கெட் அணி ரிஷப் பந்தை மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் அவருக்கு போதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. எந்தவொரு வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசினாலும், அதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயத்தில் மோசமான ஷாட் ஆடி தேவையில்லாமல் அவுட்டாகி விடுகிறார். இந்திய அணி முக்கியமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கும்போது அவரது அவுட், அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் விராட் கோலி, ரவி சாஸ்திரி ரிஷப் பந்த் சூழ்நிலையை அறிந்து விளையாட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்நிலையில் புதிதாக பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் ரதோரும் ரிஷப் பந்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ரிஷப் பந்த் ஆட்டம் குறித்து விக்ரம் ரதோர் கூறுகையில் அனைத்து இளம் வீரர்களும் பயமின்மை - கவனக்குறை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு வீரர்களும் பயின்மையுடன் விளையாட வேண்டும் என்று விரும்புகிறது. ரிஷப் பந்தின் ஷாட்ஸ் அவரை சிறப்பானவராக உருவாக்கும் என்பதால், அவற்றை அவர் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எந்தவொரு பேட்ஸ்மேனும் கவனக்குறைவாகவும், அக்கறையற்ற வகையிலும் விளையாடுவதை விரும்பமாட்டார்கள் என்றார்.